Saturday, March 29, 2014

என் மரணம்

உடை வாளை 
இறுக்காத சரணகதியும் 
உயிர் வாழ கேட்கின்ற 
இறுதி நிலையுமாய் 
அமையும் அத்தருணம் 

நிகழ்கால நிரலொன்றின் 
நிச்சிலப் பொழுதொன்றில் 
நிமிடத்திற்கும் 
வினாடிக்கும் இடையில் 
கண்காணிப்பை மீறி 
கணிக்கப் பட்டிருக்கும் அந்நொடி 

யார் பிடித்து வைத்திருப்பாரோ 
யாருக்கும் தெரியாது 
உள்ளிழுத்த காற்றை 
வெளியேற விடாத வேளையாய் 
சம்பவிக்கும் அச் சடங்கு 

உடன்கட்டை ஏற என்னுடன் 
ஒப்புக்கொண்டவள் 
உயிர் கட்டை இறங்க 
தப்பிக் கொண்டவளாய் தள்ளி நின்று 
ஒப்பாரியை ஒப்புவிப்பாள் ஊருக்கு 

பிள்ளைப் பாத்திரங்கள் 
பிரிந்த மாத்திரத்தில் 
கண்கள் பனிப்பார்கள்-கொஞ்சம் 
கவலை தொனிக்க 

சக சொந்தங்கள்-என் 
சா முன் குறை மெழுகி 
அனுதாப பூச்சுகளால் 
அநியாயத்துக்கு வெள்ளையடிப்பர் 

பெயர் மறந்த ஊர் பிரியத்தின் பேரால் 
“மையத்து”அல்லது பிணம் என்று 
மகுடம் சூட்டுவர் 

ஊர் வலமாய் வரும்-என் 
உடல் வளம் கைமாற 
நான் ஆக்கிரமித்த மண் 
என்னை ஆக்கிரமிக்க 
வாய் பிளந்து 
வழிபார்த்து காத்திருக்கும். 

No comments:

Post a Comment