Monday, November 25, 2013

ஒரே நாளில் பணக்காரன்

உழைக்கின்ற எண்ணமே குறைந்து போச்சே! 

உட்கார்ந்து சாப்பிடவே நினைக்க லாச்சே!

உல்லாச மாயைகள் பெருகிப் போச்சே! 

ஊரில் துட்டுத்தான் பெரிதாய்ப் போச்சே! 

ஒருராத் திரியில் பணக்காரன் ஆகவே ஒவ்வொரு பயலும் நினைக்கின்றான்! 

உப்புப் பெறாத பயல்கள் கூட ஊரில் ஸ்டைலாய்த் திரிகின்றான்!வாய்ப்பேச் சாலே காரியம் செய்து வாழ்க்கையை நடத்தப் பார்க்கின்றான்! 

வந்த வரைக்கும் இலாபம் என்றே மாட்டிய பேர்களை ஏய்க்கின்றான்!எதிலஎதில் மக்கள் ஏமாறு வாரென்ற இலக்கணம் கற்றுத் தெளிகின்றான்! அதில்அதில் நுழைந்து வேலையைக் காட்டி அள்ளிச் சுருட்டிச் செல்கின்றான்! விளம்பரத் தாலே வித்தைகள் காட்டி வேசியைப் போல மயக்குகின்றான்! 

விட்டில் பூச்சியாய் விழுகின்ற மக்களை விழுங்கி ஏப்பம் விடுகின்றான்!

அரசியல்வாதி அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொள்கின்றான்! 

பிரச்னை வந்தால் சட்டத்தின் ஓட்டையில் புகுந்து தப்பிச் செல்கின்றான்! 

உழைப்பு, நேர்மை, தியாகம் என்றால் ஓ ஓ என்று சிரிக்கின்றான்! உருட்டு, புரட்டு, திருட்டு, மிரட்டே ஊரில் ஜெயிக்கும் என்கின்றான்! ஜாலியாய் இருப்பதே வாழ்க்கை என்று தத்துவம் பேசிச் சிரிக்கின்றான்! 

சாயுங் காலம் வந்துவிட்டாலவன் தாசி மதுவெனத் திரிகின்றான்! சிறுகச் சேர்த்துப் பெருக வாழும் சிந்தனை எல்லாம் போயாச்சே! பெருகச் சேர்த்துச் சிறுக வாழும் சின்னப் புத்தி வந்தாச்சே!

No comments:

Post a Comment