Monday, November 25, 2013

லண்டனில் ஓர் தமிழன்

   தாய் நாட்டில் வழியிருக்க.. 

தாய் தகப்பன் அயலிருக்க.. 
கற்றதமிழ் நாவிருக்க..- என் 
மனம் மட்டும் மறுத்தது உடனிருக்க.. 

பள்ளிக்கூட வாழ்க்கை முற்றுப்பெற 
வெளிநாட்டு மோகம் சற்றுத்தொட.. 
மாறுகின்ற சமூகப்போக்கின் முன்னோடியாக 
வெளிநாடு ஒன்றே முன்னிலையானது.. 

ஒரேயொரு ஆண்பிள்ளை 
ஆசைப்பட்டு கேட்டான் என்று - அம்மா 
அடகுவைத்து காசெல்லாம் 
ஆரார்க்கோ கைமாற்றி.. 

கண்டவனின் கால் பிடித்து 
கெஞ்சி மன்றாடி - வலியது மறந்து 
எனக்காய் போராடி - கடைசியில் 
மாணவனாய் அனுமதித்தான் வெள்ளைக்காரன் 

அவன் தந்த விசாவுக்கு மதிப்பளித்து 
வந்தேன் வெளிநாடு- பெற்றொரை தவிக்கவிட்டு.. 
வந்த சந்தோசம் கவலைகளை மறைத்தது 
புதுவித தனிமை ஒருவித இனிமை.. 

அம்மாவை விட்டு விலகாமல் இருந்த நான் 
வாரம் ஒருமுறை அழைப்பு -பின் மாதம் ஒருமுறை 
படிப்பும் வேலையும் நிரந்தரமாய்.. 
வாழ்க்கையே மாறியது இயந்திரமாய் 

அப்பா செலவில் கஸ்டம் தெரியவில்லை அப்போ 
செலவுக்காய் வேலை செய்து கஸ்டப்படுவது இப்போ 
அஞ்சுக்கும் பத்துக்கும் நாள் முழுக்க வேலை பார்த்து 
அதில பாதி படிப்புக்கு, மீதி செலவுக்கு 

யூனிவர்சிட்டி போகாட்டி UKBA பிடிப்பாங்க 
வேலைக்கு போகாட்டி சாப்பாடு கிடைக்காது 
ஒவ்வொரு நாளும் யுகமாய் தெரியுது.. 
ஒருமுறை தான் வாழ்க்கை- அதுவும் வீணே கழியுது 

தீபாவளி பொங்கல் எதுவும் தெரியாது 
தீயவன் நல்லவன் பேதம் புரியாது 
ஏமாற்றம் நஷ்டங்கள் பல வந்து போயின - என் 
மனமாற்றம் இப்ப நொந்து போயின 

தமிழன் என்ற உணர்விழந்தேன் 
எல்லோருக்கும் அடிபணிந்தேன் 
இரவு பகல் பனி வெயில் நினைவிழந்தேன் 
விதியதனை எண்ணி தலை குனிந்தேன்.. 

இடைவேளை ஐந்து நிமிடம் - 
அம்மாவுடன் தொலைபேச.. 
தமிழையும் மறக்காமல்- சிறு 
கவிதை இங்கு வலை வீச.....

No comments:

Post a Comment