Friday, January 10, 2014

புத்தெழுச்சியாய் மீட்பாய் விடை

இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கும் 
தூக்கம் கலை ; 
சோம்பலைத் தழுவும் 
கதகதப்பா உன் நிலை ? 
துணிச்சலுக்கு கொடு விலை ! 

எழுக தொய் மனமே 
அழுந்திக் கிடப்பதில் ஆழமாகாதே ; 
பகலவனைப் பார் 
விடியலுக்குள் பொன்மணித்தேர் 
விரைந்துன் இலக்கு சேர் ! 

அளவீட்டுத் தந்திரம் 
அறிந்தவர் பலர் இங்கே; 
இரு கைகளுக்குள் உலகை மூடு 
வெளிச்சம் உனக்குள் தேடு 
நாளைக்கு வேறு தினம் , இன்றே ஓடு ! 

நடப்பதைக் கவனி 
ஒரு பிடிக்குள் இரையாகவும் 
வசனகர்த்தாக்களுக்குத் திரையாகவும் 
சுயநலப் பாய்ச்சலுக்குக் கரையாகவும் 
பொதுவாய்ச் சம்மணமிட்டிருப்பாய் ! 

தூண்டிலாகு 
பொறுமையின் எல்லை காண்பாய் ; 
தடுமாறத் தவறு 
தலைக்குனிவுகளைத் தணலில் சிதறு 
கிளிப்பிள்ளை சமுதாயம் உதறு ! 

காகிதப் பூக்களுக்கும் 
விலையதிகம் இந்நாளில் ; 
கருத்தினில் சதைப்பற்று பெருக்கு 
அலட்டல்களை உருக்கு 
தோல்வியை சங்கடத்திற்குள் நெருக்கு ! 

சுதந்திரமாய்க் கூடுகட்டு 
தனிமைப் பூங்காவில் ; 
கால்விலங்கு உடை 
கவனம் கையாள ஏது தடை ?! 
புத்தெழுச்சியாய் மீட்பாய் விடை !

No comments:

Post a Comment