Thursday, November 3, 2011

உனக்கு நீயே போதிமரம் ! (சிந்தனை வரிகள்


உனக்கு நீயே போதிமரம் !
(சிந்தனை வரிகள் )


கருவறை தொடங்கி கல்லறையில் முடியும்
மனிதனின் வாழ்க்கைப் பயணம்
உண்பதிலும் உறங்குவதிலும் உரையாடுவதிலும்
முடிந்துவிடுவதில்லை !
முழுமை அடைவதுமில்லை !

தன்னை அறிந்தவனே
தரணியில் முழுமையான மனிதன் ஆவான் !

குழந்தையாகத் தொடங்கும் மனிதப் பரிணாமம்
முழுமைமனிதனாக
முற்றுப் பெறவேண்டும்
உருவில் அல்ல !
அறிவில் !!"

நண்பனே ! நீ
எதைக் கேட்டாலும்
எதைச் சொன்னாலும்
எதைச் செய்தாலும்
ஏன்? எதற்கு ? எப்படி ?
என்ற வினாக்களை உனக்குள்
எழுப்பு ! அப்பொழுது
உன்னையே நீ அறிவாய் !
உலகையும் நீ அறிவாய் !"
என்று அன்றே எடுத்துரைத்தார்

"உனக்கு நீயே போதிமரம்!"
என்பதன் வழித்தடம்தான்
சாக்ரட்டீசின் அந்த
தத்துவக் குரல் !


மனமே உனக்கு ஆசான் !
மனச்சாட்சியே உனது நீதிபதி!
உனது தவறுகளை முதலில் சுட்டிக்காட்டிக்
கண்டனம் தெரிவிப்பதும்
உனது சாதனைகளை கைதட்டி முதலில்
பாராட்டுவதும் உனது மனசாட்சிதான் !

நீ செய்யும் தவறுகளும்
உனக்கு ஏற்படும் தோல்விகளும்
உன்னை ஞானம் பெறுவதற்கான பாதையில்
உனது மனத்திருத்தம் மற்றும் விடா முயற்சியின் மூலம்
அழைத்துச் செல்லும்

தவறுதல் மனித இயல்பு !
திருந்திக் கொள்வது மனித மரபு !
திருந்தியவன் உயர்ந்தவனாகிறான்
திருந்தாதவன்வருந்தியே மாய்கின்றான் !

நீ
செய்யும் பாவங்கள் புண்ணியங்கள் தர்மங்கள் அதர்மங்கள்
அத்தனையும் உனது" மனம் "
அன்றாடம் பட்டியலிடுகின்றது
அப்பொழுது உனது"மனசாட்சி "
நல்லவைகளுக்கு "மகிழ்ச்சி" "திருப்தி '
என்ற பரிசுகளை வழங்குகிறது
தீயவைகளுக்கு ":குற்றஉணர்வு"மனஉளைச்சல் "
என்ற தண்டனைகளை வழங்குகின்றது !

உனக்கு நீயே போதிமரம் இதை உணர்ந்தால்
உனக்கு ஞானம் வரும் !

ஞானம் தேடி நீ புத்தரைப்போல்
வனத்திற்குள் செல்லாதே
உன் மனதிற்குள் செல் ! அங்கே
உனது தேடலின்மூலம்
ஞானப் புதையல்களைப் பெறலாம்!

உனது செயலுக்கு வழி வகுப்பது அறிவு !
உனது செயலுக்கு வழி கட்டுவது மனசு !
வழி வகுப்பவன் உயர்ந்தவனா ?
வழி காட்டுபவன் உயர்ந்தவனா ?
முடிவு உன்கையில் !
முடிவை அறிந்துகொண்டால் நீ
ஞானம் பெற்ற்வனாகின்றாய் !

இறுதியாக இந்த
வினாவை எழுப்பி
விடைபெறுகின்றேன் !

"விண்ணைத் தோண்டி விந்தைகள் காணும் மனிதா !
மண்ணைத் தோண்டி பொன்னைக் காணும் மனிதா !
உன்னைத் தோண்டி உன்னைக் காண்பது எப்போது ?"

பி .கு :இந்த வினாவிற்குரிய விடையை நீ
அறிந்துவிட்ட்டால் உண்மையில் நீயே ஞானி !










No comments:

Post a Comment